திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.17 திருவிசயமங்கை பண் - காந்தாரபஞ்சமம் |
மருவமர் குழலுமை பங்கர் வார்சடை
அரவமர் கொள்கையெம் அடிகள் கோயிலாங்
குரவமர் சுரபுன்னை கோங்கு வேங்கைகள்
விரவிய பொழிலணி விசய மங்கையே.
|
1 |
கீதமுன் இசைதரக் கிளரும் வீணையர்
பூதமுன் இயல்புடைப் புனிதர் பொன்னகர்
கோதனம் வழிபடக் குலவு நான்மறை
வேதியர் தொழுதெழு விசய மங்கையே.
|
2 |
அக்கர வரையினர் அரிவை பாகமாத்
தொக்கநல் விடையுடைச் சோதி தொன்னகர்
தக்கநல் வானவர் தலைவர் நாடொறும்
மிக்கவர் தொழுதெழு விசய மங்கையே.
|
3 |
தொடைமலி இதழியுந் துன்எ ருக்கொடு
புடைமலி சடைமுடி யடிகள் பொன்னகர்
படைமலி மழுவினர் பைங்கண் மூரிவெள்
விடைமலி கொடியணல் விசய மங்கையே.
|
4 |
தோடமர் காதினன் துதைந்த நீற்றினன்
ஏடமர் கோதையோ டினித மர்விடங்
காடமர் மாகரி கதறப் போர்த்ததோர்
வேடம துடையணல் விசய மங்கையே.
|
5 |
மைப்புரை கண்ணுமை பங்கன் வண்டழல்
ஒப்புரை மேனியெம் முடைய வன்னகர்
அப்பொடு மலர்கொடங் கிறைஞ்சி வானவர்
மெய்ப்பட அருள்புரி விசய மங்கையே.
|
6 |
இரும்பொனின் மலைவிலின் எரிச ரத்தினால்
வரும்புரங் களைப்பொடி செய்த மைந்தனூர்
சுரும்பமர் கொன்றையுந் தூய மத்தமும்
விரும்பிய சடையணல் விசய மங்கையே.
|
7 |
உளங்கையி லிருபதோ டொருப துங்கொடாங்
களந்தரும் வரையெடுத் திடும்அ ரக்கனைத்
தளர்ந்துடல் நெரிதர அடர்த்த தன்மையன்
விளங்கிழை யொடும்புகும் விசய மங்கையே.
|
8 |
மண்ணினை யுண்டவன் மலரின் மேலுறை
அண்ணல்கள் தமக்களப் பரிய அத்தனூர்
தண்ணறுஞ் சாந்தமும் பூவும் நீர்கொடு
விண்ணவர் தொழுதெழு விசய மங்கையே.
|
9 |
கஞ்சியுங் கவளமுண் கவணர் கட்டுரை
நஞ்சினுங் கொடியன நமர்கள் தேர்கிலார்
செஞ்சடை முடியுடைத் தேவன் நன்னகர்
விஞ்சையர் தொழுதெழு விசய மங்கையே.
|
10 |
விண்ணவர் தொழுதெழு விசய மங்கையை
நண்ணிய புகலியுள் ஞான சம்பந்தன்
பண்ணிய செந்தமிழ் பத்தும் வல்லவர்
புண்ணியர் சிவகதி புகுதல் திண்ணமே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |